Friday, 29 July 2016

திருக்கழுக்குன்றம்

*வேதங்கள் வழிபட்ட திருக்கழுக்குன்றம் திருத்தலம்*

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோவில் புராண வரலாற்று சிறப்பு மிக்கத் திருத்தலமாகும்.

வேதங்கள் வழிபட்ட திருக்கழுக்குன்றம் திருத்தலம்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோவில் புராண வரலாற்று சிறப்பு மிக்கத் திருத்தலமாகும். வேதங்கள் மலை வடிவில் வந்து தவம் செய்த தலம் இதுவாகும். அந்த மலையின் மீதே வேதகிரீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

முனிவர்கள் 8 பேர் கழுகு உருவில், இத்தலத்து இறைவனை வழிபட்டதால் ‘திருக்கழுக்குன்றம்’ என்று பெயர் பெற்றது.

இங்கு தஞ்சாவூரில் நடைபெறும் மகாமகம் போல், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ என்னும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. பொதுவாக உவர்நீரில்தான் சங்கு தோன்றும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஆலயத்தில் உள்ள நன்நீர் நிறைந்த குளத்தில், ஒரே ஒரு சங்கு பிறந்து வெளி வருவது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். அவ்வாறு தோன்றும் சங்கைதான், சங்குதீர்த்த புஷ்கர மேளாவின் போது, இறைவனை அபிஷேகம் செய்ய பயன்படுத்துவார்கள்.

ஒரு சமயம் வேதங்கள் அனைத்தும் சிவபெருமானிடம் வந்து தொழுதன. ‘இறைவா! இந்த உலகம் அழியும் காலத்திலும், வேதங்களாகிய நாங்கள் அழியாமல் உங்கள் திருவடியின் கீழ் நிலைபெற்றிருக்க வேண்டும்’ என்று வேண்டின.

அதற்கு சிவபெருமான், ‘நீங்கள் ஒரு மலை வடிவாய் நில்லுங்கள். அங்கு நான் சிவலிங்க வடிவில் நீங்கள் செய்யும் பூஜையை ஏற்றுக் கொண்டு ஞான சொரூபமாய் இருந்து அருள்வேன். அந்த இடம் வேதகிரி என வழங்கப்படும்’ என்றார். அதன்படி ருக்வேதம் அடியாகவும், யஜூர்வேதம் மத்தியிலும், சாமவேதம் மேற்பகுதியாகவும், அதர்வணவேதம் மலையின் சிகரமாகவும் அமைந்தன.

*மார்கண்டேய சங்கு தீர்த்தம் :*

மிருகண்டு முனிவர்- மருத்துவதி தம்பதியருக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. அவர்கள் ஈசனை நோக்கி கடும் தவம் புரிந்தனர். அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான், ‘உங்களுக்கு நீண்ட காலம் வாழும் புத்தி குறைவான மகன் வேண்டுமா?, நிறைந்த புத்தியோடு குறைந்த காலம் வாழும் மகன் வேண்டுமா?’ எனக் கேட்டார்.

இறைவனிடம் புத்தியோடுள்ள குறைந்த காலம் வாழும் மகனை வேண்டினர் அந்த தம்பதியர். எனவே மார்கண்டேயர் 16 வயது ஆயுளோடு பிறந்து, சிவ பக்தியோடு வாழ்ந்து வந்தார். அவருக்கு 16 வயது ஆனபோது அவரது உயிரைப் பறிக்க எமதூதர்கள் வந்தனர். அப்போது மார்கண்டேயர் சிவனை நினைத்து கடும் பூஜை செய்து கொண்டிருந்தார். இதனால் அவரது உயிரை கவர முடியாமல் எமதூதர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து எமனே நேரடியாக அங்கு வந்தான். எமனைக் கண்டதும் மார்கண்டேயர், சிவலிங்கத்தை இறுக தழுவிக்கொண்டார்.

ஆனால் எமன், பாசக்கயிறை மார்கண்டேயர் மேல் வீசினான். அந்த கயிறு மார்கண்டேயரோடு சிவலிங்கத்தையும் சுற்றி வளைத்துக் கொண்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், உக்கிரமூர்த்தியாய் தோன்றி எமனை எட்டி உதைத்தார். எமதர்மன் மூர்ச்சையாகி விழுந்தான்.

பின்னர் மார்கண்டேயரை என்றும் 16 வயதுடன் இருக்க அருள்புரிந்தார். இதையடுத்து மார்கண்டேயர் பல சிவதலங்களுக்கு சென்று வழிபட்டார். அப்படி அவர் வந்த திருத்தலத்தில் ஒன்றுதான் திருக்கழுக்குன்றம்.
                                    1-9-2011 அன்று உருவான சங்கு அவர் இந்த ஆலயத்திற்கு, குரு பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் நேரத்தில் வந்தார். இத்தல வேதகிரீஸ்வரரை வழிபடும் முன்பாக அங்குள்ள குளத்தில் நீராடினார். சிவபூஜை செய்யும் முன்பாக அங்கு விநாயகர் ஒருவரை பிரதிஷ்டை செய்தார். சிவனுக்கு அபிஷேகம் செய்ய, நீர் எடுக்க பாத்திரம் எதுவும் இல்லாததால், சிவபெருமானை நினைத்து வேண்டினார் மார்கண்டேயர். இதையடுத்து அங்குள்ள நன்நீர் குளத்தில் ஒரு சங்கு உருவாகி வெளிவந்தது. இறைவனால் தரப்பட்ட அந்த சங்கை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்தார். இறைவனுக்காக சங்கு உருவானதால் அந்தக் குளத்திற்கு ‘சங்கு தீர்த்தம்’ என்று பெயர் உண்டானது.

இந்த நிகழ்வே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்கழுக்குன்றம் திருத்தலத்தில் ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது பெருமளவில் மக்கள் கலந்து கொண்டு சங்கு தீர்த்தக் குளத்தில் நீராடி மகிழ்கிறார்கள்.

சங்கின் இத்திருப்பிறப்பு முதன்முதலில் குரு பகவான் கன்னி ராசியில் செல்லும் போது நடந்தது. ஆகவே குரு பகவான் கன்னி ராசிக்குச் செல்லும் நாள் ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ வாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் குரு பகவான், இத்தல இறைவனை லட்சதீபம் ஏற்றி வழிபடுவதாக ஐதீகம். எனவே அன்றைய தினம் கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.

இன்று வரை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இங்குள்ள குளத்தில் சங்கு பிறக்கிறது. கடைசியாக கடந்த 1.9.2011 அன்று சங்கு பிறந்தது. அந்த சங்கைக் கொண்டுதான், சங்கு தீர்த்த புஷ்கர மேளாவின் போது இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்கள்.

சங்கு பிறப்பதற்கு முதல் நாள் குளம் முழுவதும் நுரையாகக் கிளம்பும். பின்னர் அக்குளத்தில் தோன்றும் சங்கு, ஒரு ஓரமாக மிதந்து வரும். அதை கோவிலிலுக்குள் மேள தாளம் முழங்க எடுத்துச் சென்று, இறைவனின் சிறப்பு அபிஷேகங்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.

இந்த ஆண்டு 2.8.2016 (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில் குரு கன்னி ராசியில் பிரவேசமாகிறார். இதை உத்தேசித்து 31.7.2016 மாலை முதல் சிறப்பு யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட உள்ளன. 2.8. 2016 அன்று காலை 9 மணிக்கு முடியும் இந்த பூஜையை அடுத்து, சங்கு தீர்த்தக் குளத்திற்கு அபிஷேகம் செய்யப்படும். மாலை 6 மணிக்கு லட்ச தீபங்கள் ஏற்றி வழிபாடு நடைபெறும். அன்று இரவு திருக்கல்யாணம் நடந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி- அம்பாள் வீதி உலா வருவார்கள்.

*நால்வர் கோவில் :*

சைவ சமயக் குரவர்கள் திருக்கழுக்குன்றம் அடைந்து வேதகிரி மலையில் ஏற நிதானித்து, கீழேயே நின்று பாடல் பாடினர். இந்த இடம் நால்வர் கோவில் என்று வழங்கப்படுகிறது. மலைமீது சொக்கநாயகி உடனுறை வேதகிரீஸ்வரர் என்ற ஆலயமும், ஊருக்குள் திருபுரசுந்தரி உடனுறை பக்தவசலேஸ்வரர் திருக்கோவிலும் உள்ளன. இவை முறையே மலைக்கோவில், தாழக்கோவில் என்று அழைக்கப்படுகிறது.

மலைக்கோவிலுக்குச் செல்ல 565 படிகள் உள்ளன. இறைவன் சுயம்புத் திருமேனியாக எழுந்தருளியுள்ளார். கருவறை, கருங்கற்பாறைகளால் ஆனது. உட்சுவரில் சோமாஸ்கந்தர், பிரம்மா, திருமால் உள்ளனர். வடக்குச் சுவரில் தட்சிணாமூர்த்தி உள்ளார். முதல் பிரகாரத்தில் விநாயகரும், சொக்கநாயகி அம்மனும் அருள்கின்றனர். செங்கல்பட்டில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.

*நதிகளின் நீராடல் :*

இத்திருத்தலத்தில் சங்கு தீர்த்த புஷ்கரமேளா நடைபெறுவதற்கு இன்னொரு சுவையான வரலாறும் கூறப்படுகிறது.

அனகை, அம்பை, இந்திரபுத்ரா, ருத்ரா, கங்கை, காளிந்தி, கவுதமை, கம்பை காவேரி, சிங்கை சிந்து சோமம், சோவதி, தாமிரபரணி, துங்கபத்திரா, தென் குமரி, தேவிகை, நர்மதை, நந்தினி, பம்பை, பாலி பிராமி, பினாகி, மலப்பிரதாரினி, மந்தாத்ரி, மணிமுத்து, யமுனை, வேத்தராவதி, கைதாரிணி, வைகை முதலிய நதிகளுக்குள், யார் உயர்ந்தவர்கள் என்ற சண்டை உருவானது. ஒவ்வொருவரும் தாங்களே உயர்ந்தவர்கள் என்று இறுமாப்பு கொண்டனர்.

அனைத்து நதிகளும் இத்தலத்தில் உள்ள சங்கு தீர்த்தத்தில் நீராடி வேதகிரீஸ்வரரை வழிபட முடிவு செய்தன. அதன்படி இங்கு வந்து நீராடி இறைவனை வழிபட்டன. அப்போது இறைவன் அவர்கள் முன்பாக தோன்றி, ‘இத்தலத்தில் தேங்கி நிற்கும் சங்கு தீர்த்தம், இறைவனான எனக்கு அபிஷேகம் செய்ய சங்கை உற்பத்தி செய்கிறது.

அதைக் காட்டிலும் நீண்ட நெடிய நதிகளாகிய நீங்கள் உயர்ந்தவர்களா? என்பதை முடிவு செய்யுங்கள்’ என்று கூறி மறைந்தார். நதிகள் அனைத்தும் வெட்கி தலைகுனிந்தன. பின்னர் தாங்கள் இறுமாப்பால் செய்த பாவங்கள் விலக இந்த தீர்த்த குளத்தில் நீராடின. அந்த தினம் குரு பகவான் கன்னி ராசியில் புகுந்த நாளாகும். எனவே இந்த நாளில் அனைத்து நதிகளும், இத்தலத்தில் உள்ள சங்கு தீர்த்தத்தில் நீராடுவதாக ஐதீகம்.

Thursday, 28 July 2016

ஸ்ரீ வாஞ்சியம்.

வாழ்வில் ஒரு முறையேனும்
சென்று தரிசிக்க வேண்டிய தலம்.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவராக விளங்கும் பூலோக கைலாயம் என அழைக்கப்படும் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி.

உலகிலேயே எம தர்ம ராஜனுக்காக தனிக்கோயில் அமைக்கப்பட்டு வழிபடும் தலமாக சிறப்பு பெற்றது ஸ்ரீ வாஞ்சியம்.

காசிக்கு ஒப்பான சிறப்புடையதாக
ஆறு தலங்கள் போற்றப்படுகிறது.
(திருவெண்காடு, திருவையாறு, சாயாவனம், மயிலாடுதுறை, திருவிடை மருதூர், ஸ்ரீவாஞ்சியம்). இந்த ஆறு தலங்களுள் அளப்பரிய மகிமை பொருந்திய தலமாகத் திகழ்வது திருவாரூர் மாவட்டம்  நன்னிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாஞ்சியம்.

பிரளய காலத்தில் உலகம் அழிந்த போது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடித் தென் திசைக்கு வந்தனர். அப்போது தான் காவிரிக் கரையில்திருவாஞ்சியம் என்னும் ஊரைக் கண்டு அதன் அழகில் மயங்கி லிங்க வடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டு விட்டனர். இந்த தலத்தை தான் மிகவும் நேசிப்பதாக சிவன் பார்வதியிடம் கூறியதாக புராணங்கள் சொல்கின்றன. இத்தலத்தின் மூலவர் ஒரு சுயம்பு லிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். உலகிலுள்ள 64 சுயம்பு லிங்கத் திருமேனிகளுள் இதுவே மிகவும் பழமையானதாகும். தன்னைப் பிரிந்த திருமகளை (ஸ்ரீ) மீண்டும் அடைய விரும்பி (வாஞ்சித்து) விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் இதுவாதலால் இத்தலம் ஸ்ரீ வாஞ்சியம் எனப்படுகிறது.

மேலும் இத்தலத்தில் சிவனை
தரிசனம் செய்பவர்களுக்கு மறு பிறப்பில்லாமலும், அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும் என்றும் அருளினார். அவ்வாறே இத்தலத்தில் க்ஷேத்திர பாலகனாக விளங்கும் எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற வரமும் அளித்தார். அதன்படி நாள்தோறும் எமதர்ம ராஜனுக்கே முதல் வழிபாடு, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நீராடி முதலில் யமனை வழிபட்டு பிறகே கோவிலில் மற்றவர்களை வழிபட வேண்டும் என்பது மரபாகும்.

ஒருமுறை கங்காதேவி சிவனிடம், மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான் வழி கூறவேண்டும்,என வேண்டினாள். அதற்கு சிவன், உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும் என்றார்.  அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த கங்கை என்று இங்குள்ள தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது.

மரணபயம், மனச்சஞ்சலம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது. இத்தலத்தில் எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோவில் மூடப்படுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள க்ஷேத்திரங்களில் திருக்கடவூருக்கு அடுத்தப்படி நிகரற்ற தலம் திருவாஞ்சியம் ஆகும்.

ஸ்ரீவாஞ்சியம் தலம் தேவார மூவராலும் மணிவாசகப் பெருமானாலும் பாடல் பெற்றுள்ள தலம். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலமாகவும் மேலும் பல சிறப்புக்களை பெற்ற தலமாகவும்  திகழ்கிறது ஸ்ரீவாஞ்சியம்.

மூல மூர்த்தி வாஞ்சிநாதர் எனும் திருநாமத்துடன் எழுந்தருளி உள்ளார். அம்பிகையின் திருநாமம் மங்களாம் பிகை. எமன் அருள் பெற்ற . தலமாதலால் இங்கு எமனே சுவாமிக்கும் அம்பிகைக்கும் வாகனத் தொண்டு புரிகிறார்.

ஸ்ரீ வாஞ்சியத்தில் மட்டுமே ராகவும் கேதுவும் ஒன்றாக ஓரே சிலையில் பாம்பு உடலாகவும் மனித முகமாகவும் ஓரே நிலையில் சஞ்சர்க்கின்றனர். ஓரே மூர்த்தியாக எழுந்தருளியுள்ள ராகு-கேதுவை வழிபட்டால் நாகதோஷம் காலசர்ப்பதோஷம் நீங்கி நலம் பெறலாம்.

இத்தலத்தின் பெயரை சொன்னாலே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக கோயில் அருகில் யாராவது இறந்து விட்டால், பிணத்தை எடுக்கும் வரை கோயிலில் நடைபெறும் பூஜைகள் நிறுத்தி வைக்கப் படும். ஆனால் இவ்வூரில் பூஜையை நிறுத்துவதில்லை. எமதர்மனே இங்கு க்ஷத்திர பாலகராக இருப்பதால் இவ்வாறு நடக்கிறது. மேலும் கோயில் எதிரிலேயே சுடுகாடு இருக்கிறது. பிணத்தை எரியூட்டியவுடன் அங்கிருந்த படியே சுவாமியை வணங்கி இறந்தவர் சிவனடி சேர வேண்டிக்கொள்கிறார்கள். ஒருவர் இறந்த பின், அவரது பிள்ளை களால் செய்யப்பட வேண்டிய பிதுர் காரியங்களை இக்கோயிலில் முன்கூட்டி நாமே செய்து, முக்தி கிடைக்க வழி தேடிக்கொள்ளலாம். இதற்கு "ஆத்ம தர்ப்பணம்' எனப்பெயர். மேலும் இத்தலத்து தீர்த்தத்தை பருகினால் மரண அவஸ்தைப்படுகிற வர்களுக்கு சிரமம் நீங்கும் என்கிறார்கள். இத்தலத்தில் இறந்தாலும், வேறு இடத்தில் இறந்தவர் களுக்கு இங்கு பிதுர் காரியம் செய்தாலும் சிவனே அவர்களது காதில் பஞ்சாட்சர மந்திரம் (சிவாயநம) கூறி தன்னுள் சேர்த்து கொள்வதாக ஐதீகம்.

பிற தலங்களைப் போல் ஸ்ரீவாஞ்சிய தரிசனப் பேறு எளிதில் கிடைக்கப் பெறுவதில்லை. தல யாத்திரை மேற்கொள்ள விழையும் அன்பர்களுக்கு இடர்களோ தடங்கல்களோ சோதனைகளாக வந்த வண்ணம் இருக்கும். அல்லது பல காரணங்களால் தாமதப் படவும் வாய்ப்புகள் உண்டு. ஆன்மாக்களின் கர்ம வினைப் பலன்கள் எளிதில் இத்தலத்தை அடைய விடுவதில்லை.

இருப்பினும் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமியையே உபாயமாகப் பற்றி, உறுதியான பக்தியோடு முயற்சி மேற்கொள்ளும் அடியவர்களுக்குப் பெருமான் பெரும் கருணையோடு தரிசனம் தந்தருளி ஆட்கொள்கிறான்.

இத்திருத்தலத்திற்கு எப்படி செல்வது?

இத்திருத்தலம் திருவாரூர் மாவட்டத்தில்
அமையப் பெற்றுள்ளது. மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீவாஞ்சியம் திருக்கோயில், திருவாரூரில் இருந்து 18 km தொலைவிலும், மயிலாடுதுறை யில் இருந்து 36 km தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 28 km தொலைவிலும், நன்னிலத்தில் இருந்து 6 km தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து வருபவர்கள் மயிலாடுதுறை வந்து, அங்கிருந்து திருவாரூர் சாலையில் அமைந்துள்ள சன்னாநல்லூரை அடைந்து, நன்னிலம் வழியாக ஸ்ரீவாஞ்சியத்தை சென்றடையலாம்.


ஓம் நமசிவாய.

Tuesday, 26 July 2016

பூக்காரி காமாட்சி"

பெரியவா சரணம் !!

பூக்காரி காமாட்சி"

நீ இருந்தா இப்படி என்னை வெறுங் கூடையுடன் அனுப்புவாயா?"

காஞ்சி மடத்தருகில், காமாட்சி என்று ஒரு பூக்காரி இருந்தாள். அவள் மஹா பெரியவாளை, ‘அப்பா’ என்றுதான் அழைப்பாள். தினமும் ஒரு கூடை பூவினால் பெரியவாளை அர்ச்சிப்பாள். பெரியவா, ஏன் இப்படி பூவை வீணாக்கறே? இதை வித்தா உனக்குக் காசு கிடைக்குமே!" என்பார். காசு பெரிசா சாமி! உன் தலையில் அர்ச்சித்தால் அதற்கு மேலேயே எல்லாம் கிடைக்கும்" என்பாள் பூக்காரி.

மடத்தில் ஒரு நியதி உண்டு. பெரியவா படுத்துக்கப் போய்விட்டால் யாரும் எழுப்பக்கூடாது. ஆனால், இதற்கு பூக்காரி காமாட்சி மட்டும் விதிவிலக்கு. எத்தனை நேரமானாலும் வரலாம். ஏனெனில், பெரியவாளே அவளிடம், நீ உன் வியாபாரத்தை முடித்துக்கொண்ட பிறகுதான் என்னிடம் வரணும். பாதியில் விட்டு விட்டு வரக்கூடாது!" என்று கட்டளை இட்டிருந்தார். அவளது பிழைப்பை தனக்காக விடுவதற்கு அந்தக் கருணாமூர்த்தி சம்மதிப்பாரா?

ஒரு நாள் பெரியவா, நாகராஜன் என்பவரை ஒன்பது மணி செய்தியைச் சொல்லச் சொல்லி, கேட்டுக் கொண்டிருந்தார். வேதாந்த தத்துவங்கள் ஒருபுறம் இருந்தாலும், உலக நடப்பையும் தெரிந்து கொள்ளாமல் விடமாட்டார். அந்தச் செய்திகளை அலசி ஆராய்ந்த பிறகு படுக்கப்போக நெடு நாழிகை ஆகிவிடும்.

அன்று, புதுக்கோட்டையிலிருந்து ‘ஜானா’ என்ற ஒரு பெண் பெரியவாளுக்கு வெல்வெட்டில் பாதுகை ஒன்றை செய்து கொண்டு வந்திருந்தாள். அதைக் காலை முதல் பெரியவா கழற்றவேயில்லை. படுக்கைக்குப்போகுமுன் கொட்டகை சென்று, தேக சுத்தி பண்ணிக் கொண்டு வரச்சென்றார். அப்போது செய்தி சொல்லும் நாகராஜன், இன்று பெரியவா பாதுகையைக் கழட்டினதும் நான்தான் எடுத்துக்கொள்வேன். என்னிடம் பெரியவர் பாதுகையே இல்லை!" என்று மகாபெரியவர் பாதுகையைக் கழட்டுவதற்குக் காத்திருந்தார்.

பெரியவா பாதுகையைக் கழட்டாமலேயே உட்கார்ந்திருந்தார். பூக்காரியும் நானும் அங்கு போய் நமஸ்காரம் பண்ணினோம். பாதுகையைக் கழற்றி பூக்காரியிடம் கொடுத்து, இது உனக்குத்தான், எடுத்துக்கோ!" என்றார் பெரியவர்.
நாமொன்று நினைத்தால் தெய்வமொன்று நினைக்கிறது!" என்று நாகராஜன் குறையோடு திரும்பினார்.

அப்படிப்பட்ட அன்புக்கு, அந்த ஏழைப் பூக்காரி பாத்திரமாயிருந்தாள். எத்தனையோ பேர் அவளிடம் லட்ச ரூபா தரோம், இந்தப் பாதுகையைக் கொடு" என்றனர். அவள் அசையவேயில்லை.
பெரியவா அவளுக்கு இந்த உலக வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளெல்லாம் கிடைக்கச் செய்தார்.அவள் வீட்டுத் திருமணங்களுக்கு வண்டி, வண்டியாக கல்யாண சாமான்கள் அனுப்பினார்.

பெரியவா ஸித்தியான பிறகும், சமாதிக்கு இரவில் பூக்களால் அர்ச்சிப்பதை காமாட்சி விடவில்லை. ஆனால், பெரியவா இருக்கும்போது பூக்கூடையை வெறுமனே திருப்பாமல், ஏதாவது பழம் போன்றவற்றை அதில் போட்டுத்தான் அனுப்புவார். அவர் மறைவுக்குப் பின் வெறுங்கூடையைப் பார்க்கவே அவளுக்கு வருத்தமாக இருந்தது.
அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங் கூடையுடன் அனுப்புவாயா?" என்று புலம்பினாள்.கூடையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவளுக்கு, தூக்கிவாரிப்போடும்படி அதிஷ்டானத்திலிருந்து ஒரு சம்பரத்தைப் பூவை யாரோ வீசி எறிந்தது போல் வந்து அவள் கூடையில் விழுந்தது. சமாதிக்கு நேரே முறையிட்டால்கூட பதில் சொல்லக்கூடிய சாமியை, ‘போயிடுத்து,போயிடுத்து’னு யாரும் சொல்லக்கூடாது என்று அவள் எல்லோரிடமும் சொல்லுவாள்.

இதுபோல் பல நிகழ்வுகள் இன்னமும் இங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பிரத்யட்சமாக அவர் அருளைத் தந்து கொண்டுதான் வருகிறார். நம்பினார் கெடுவதில்லை. இது நான்குமறை தீர்ப்பு.

கட்டுரை-கணேச சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

----------------------------------------------------------

பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !
அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?
காமகோடி தரிசனம்
காணக்காணப் புண்ணியம்

ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில்

ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில்

kalikambal

கற்பனைக்கும் எட்டாத அருள் தரும் சிவசக்தித்தலம். கி.பி 1639 -ம் ஆண்டுக்கு முன்பே விஸ்வ கர்மா குலத்தினரால் இவ்வாலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. சென்னை என்று இந்த நகருக்கு பெயர் வர காரணமாக இருக்கும் அன்னை குடி கொண்டிருக்கும் தலம். வீர சிவாஜியும், மஹா கவி பாரதியாரும் வழிபட்ட தலம், விஸ்வ கர்மாவிற்கு தனி சன்னதி உள்ள தலம், ஆதி சங்கரர் ஸ்ரீ சக்ரம் ஸ்தாபித்த தலம் என்ற அனைத்து பெருமைகளையும் கொண்ட தலம் தான் சென்னை காளிகாம்பாள் திருக்கோவில். கமடேஸ்வரி, கோட்டையம்மன், சென்னியம்மன், நெய்தல் நில காமாட்சி என்றும் ஆயிரம் திருநாமம் அம்பாளுக்கு இத்தலத்தில். மச்ச புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஷ்ய புராணம் முதலிய புராணங்களில் இத் திருக்கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. வாருங்கள் இத்திருகோவிலின் பெருமைகளை பார்ப்போம்.

அகில புவனங்களையும் படைத்தும், காத்தும் கரந்தும் விளையாடும் அந்த ஆதி பராசக்தியானவள் நாம் உய்யக் கொள்ளும் வேடங்கள் அநேகம் அவற்றுள் ஒன்றுதான் காளி. துஷ்டர்களை அழித்து பக்தர்களை காக்க அம்மை கொள்ளும் கோலமே காளி ரூபம். காலம் என்பதன் தெய்வீக ரூபமே காளி. இந்த பூவுலகிலே பிறந்த எந்த உயிரும் வளர்ந்து பின் இறந்து மறுபடியும் பிறக்கும் என்பது நியதி. இவ்வாறு புதிதாய் தோற்றுவிக்க சக்தி வடிவம் கொள்பவள் ஒரே அன்னையே!. கோரமும் இறைவன் செயலே என்பதை எடுத்துக் காட்டவே, சௌந்தர்யமான அன்னை சக்தி, குரூரமான காளி உருவம் கொள்கிறாள். அழிவு இல்லாமல் ஆக்கம் ஏது? இரவை அழித்து பகலையும் பகலை அழித்து இரவையும் உண்டு பண்ணுபவள் அன்னையே.

காளிகாம்பாள் உற்சவர்
தர்மமிகு சென்னை என்று போற்றப்படும் சென்னை மாநகரிலே தம்பு செட்டி தெருவிலே நாம் விரும்பும் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றும் காமாக்ஷ’யாய், தீயவர்களை அழிக்கும் காளிகாம்பாளாய், உலகையாளும் தேவியாய், தன்னை வணங்குபவர்களின் துன்பம் நீக்கி இன்பம் அளிக்கும் கமடேஸ்வரி அன்னையாய் கொலு வீற்றிருக்கிறாள் அந்த பராசக்தி. அவள் குங்குமம் பெற்றாலே முக்தி.

மிகவும் புராதkalikambal4னமான கோவில், சுமார் 400 வருடங்கள் பழமையானது. சிவாஜி மஹாராஜா வழிபட்ட பவானி ஸ்ரீ காளிகாம்பாள், யாதுமாகி நின்றாய் காளி என்று பாரதியாருக்கு நா வன்மையை கொடுத்த ஸ்ரீ சாரதை காளிகாம்பாள், தன்னை வணங்கும் அன்பர்களின் செல்வ நிலயை உயர்த்தும் ஸ்ரீ மஹா லக்ஷ்மி கல்வியை கலைகளை வழங்கும் ஸ்ரீ மஹா சரஸ்வதி இருவரையும் தன் கண்களாகக் கொண்டவள் காளிகாம்பாள்.

தனது இச்சா மந்திர சக்தியால் பன்னிரண்டு ஸ்தலங்களில் காட்சி தந்து வரும் காமாட்சி அன்னை, அவற்றுள் ஒன்றான இத்திருக்கோவிலில் மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் வலக்கால் தொங்கவிடப்பட்ட நிலையில், அங்குச பாசம் மேற்கையில் ஏந்தி, தாமரை வரத முத்திரையுடன், மூக்குத்தி மின்ன, மரகத பதக்க பொன் தாலியும், ஒட்டியாணம், கொப்பு, குழை, கங்கணம், பாதச்சிலம்பு மின்ன, காலை மூன்று அரக்கர்களின் மேல் வைத்த நிலையில் எழிற் கோலம் காட்டுகின்றாள். நாம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் நீக்கினாலே அந்த பரம் பொருளுடன் சேர முடியும் என்பதை குறிப்பாக காட்டுகின்றாள் அன்னை. காளி என்றாலும் சாந்த ரூபத்தில் காமாக்ஷ’யாக எழிற் கோலம் காட்டுகின்றாள் அன்னை. அவள் சன்னதியில் நின்றாலே ஒரு நிம்மதி அம்மையை தரிசித்தவுடன் நம் பாவமெல்லாம் விலகுகின்றன. ஆதி சங்கர பகவத் பாதாள் ஸ்தாபித்த ஸ்ரீ சக்ர அர்த்த மேருவும் அம்மையின் முன் உள்ளது. அர்ச்சனை அர்த்த மேருவிற்க்குத்தான் நடைபெறுகின்றது.

ஸ்ரீ காளிகாம்பாள் திருப்பல்லாண்டிலிருந்து ஒரு பாடல்:
                                          கலைமகளே திருமகளே மலைமகளே
காshivaji-1லை கதிரொளியே!
குலக்கொழுந்தே கொற்றவையே காளிஎனும்
கலைக்கடலே கருணை ஈவாய்
சிறந்தொளிசேர் செம்பூவும் பசுந்தழையும்
சேர்ந்தன போல் சிவமும் தாயும்
அறந்தழைக்க நேர் பாதி கலந்த கோல
அழகினுக்கு ஆயிரம் பல்லாண்டு.

இந்திரன், குபேரன், வருணன், விராட புருஷன் விஸ்வகர்மா, வியாசர், பராசரர், அகத்தியர், ஆங்கிரேசர், புலஸ்தியர் ஆகியோர் வழிபட்ட தலம். கி.பி 1639 -ம் ஆண்டுக்கு முன்பே விஸ்வ கர்மா குலத்தினரால் இவ்வாலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. பரதபுரி, ஸ்வர்ணபுரி என்றெல்லாம் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இப்புராதன ஆலயம். விஸ்வ கர்மாக்கள் கோட்டையிலே வழிபட்டதால் கோட்டையம்மன். முற்காலத்தில் கடல் ஓரத்தில் இருந்திருக்கலாம் ஆங்கிலேயர் காலத்தில் இப்போது உள்ள இடத்திற்கு மாறியிருக்க வேண்டும். செம்படவர்களும் மற்றவர்களும் செந்து‘ரம் பூசி வழிபட்டதால் இவ்வன்னைக்கு சென்னியம்மன் என்ற திருநாமமும் உண்டு. சென்னம்மன் குப்பமே, சென்னை ஆயிற்று.

“ஸமாசர ரமாவாணி ஸவ்ய தக்ஷ’ண சேவிதா” என்ற லலிதா சகஸ்ரநாம நாமாவின் படி ஸ்ரீ மஹா லக்ஷ்மியும், ஸ்ரீ மஹா சரஸ்வதியும் தன் இரு கண்களாய் அமையப் பெற்ற காளிகாம்பாள் இவளாவதால் செல்வமும் கல்வியும் குவிந்துள்ள நகரமாய் சென்னை விளங்குகின்றது.

தெற்கு இராஜ்ஜயங்களை தன்வயப்படுத்தி திக்விஜயம் செய்த மராட்டிய மாமன்னன் வீர சிவாஜி 1667ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் நாள் இவ்வாலயத்திற்கு விஜயம் செய்து அன்னையை வழிபட்ட செய்தியை வரலாற்று ஏடுகளில் நாம் காணலாம்.

பிராட்வேயில் சுதேசமித்திரனில் பணி செய்து கொண்டிருந்த போதுமஹாகவி பாரதியார், யாதுமாகி நின்றாய் காளி

எங்கும் நீ நிறைந்தாய்

தீது நன்மையெல்லாம் – நின்றன்

செயல்களின்றி இல்லை

போதும் இந்த மாந்தர் வாழும்

பொய்மை வாழ்க்கையெல்லாம்

ஆதி சக்தி தாயே – என் மீது

அருள் புரிந்து காப்பாய்.

என்று அன்னையின் மேல் பாடல்கள் புனைந்துள்ளார். பாரதியார் பாடிய காளி பாடல்கள் அனைத்தும் அன்னையைப் பற்றியதே. சிவபெருமானின் அம்சமாக காலடியில் தோன்றி நமது சனாதன bharathiதர்மமான இந்து மதத்திற்க்கு புத்துயிரூட்டிய ஆதி சங்கர பகவத் பாதாள் இவ்வாலயத்திற்கு எழுந்தருளி அன்னையை வழிபட்டு ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்திருக்கின்றார் இந்த சரித்திர சிறப்பு பெற்ற நிகழ்ச்சிகளும் இத்திருகோவிலில் சுதை சிற்பங்களாக விவரிக்கப்பட்டுள்ளன.  அன்னையின் சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது, கோஷ்டத்தில் வித்யேஷ்வரி, பிரம்ம வித்யா, வைஷ்ணவி, தாக்ஷ‘யணி, மற்றும் மஹாலக்ஷ்மி எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். அம்மனுக்கு வலப்புறத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் கமடேஸ்வரர் சன்னதி. ஐயனின் கோஷ்டத்திலும் சிறிதாக துர்க்கை, பிரம்மா, விஷ்ணு, ஆலமர் கடவுள் மற்றும் வினாயகர் அருள் பாலிக்கின்றனர். திருக்கோவிலில் உள்ளேயே கிழக்கு நோக்கி அருணாச்சலேஸ்வரர் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதியும் உள்ளது.

சிவசக்தித்தலமான இத்தலத்தில் எம்பெருமான் கமடேஸ்வரராகவும், அருணாச்சலேஸ்வரராகவும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதியும் உள்ளது.. எனவே இத்தலத்தில் வழிபட்டால் காஞ்சி, அருணை ஆகிய இரு தலங்களையும் வழிபட்ட பலன் உண்டு. மேலும் கோவிலின் உள்ளேயே குரு சனனதியும், பள்ளியறையும் உள்ளன.நெரிசல் மிகுந்த பாரி முனைப் பகுதி என்பதால் ஒரே ஒரு பிரகாரம். பிரகாரத்தில் தென் கிழக்கு மூலையில் கிழக்கு நோக்கிய சித்தி புத்தி வினாயகர் சன்னதி. சுப்பிரமணியர் வட கதிர் காம முருகராகவும், அகோர வீர பத்திரர், மஹா காளி, வேத மாதா காயத்ரி, துர்கா, விஸ்வ கர்மாஆகியே’ருக்கு தனித்தனி சந்நிதிகள், வீரபத்திரர் சன்னதியின் விமானத்தில் ஆட்டுத்தலையுடன் கூடிய ஆணவம் நீங்கிய தட்சன் வீர பத்திரரை வணங்கும் சுதை சிற்பம் அற்புதமாக உள்ளது. வடக்கு நோக்கிய துர்க்கை அம்மன் செப்புத் திருமேனி, எழிலாக அருட்காட்சி தருகின்றாள் அன்னை. வெளி பிரகாத்தில் வட கிழக்கு முலையில் ஆடல் வல்லான் சன்னிதி பிரம்மோற்சவ காலங்களில் அம்மனின் அலங்கார மண்டபமாகவும் விளங்குகின்றது. பரிவார தேவதை கடல் கண்ணி, கடல் தீர்த்தம் எனவே அன்னை நெய்தல் நில காமாட்சி என்றும் அழைக்கப்படுகின்றாள் , தல விருட்சம் மா மரம்.

ஸ்ரீசக்கர நாயகிக்கு கிண்ணித் தேர்

வேறு எந்த ஆலயங்களுக்கும் இல்லாத பல சிறப்புகள் இவ்வாலயத்திற்கு உள்ளன. ஸ்ரீ சக்ர நாயகியாம் அன்னைக்கு ஸ்ரீ சக்ரமே இங்கு தேராக அமைந்துள்ளது. இந்த சக்ரராஜ விமானம் எனப்படும் இத்தேர் கிண்ணித்தேர் என்று அழைக்கப்படுகின்றது. வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் போது ஒன்பதாம் நாள் இரவு வெண்கல கிண்ணிகளால் நிறைந்த இத்திருத் தேரிலே மின் விளக்கு ஒளியில் பவனி வருகின்றாள் அன்னை. நடராஜருடன் இத்தலத்திலே எலும்பும் தோலுமாய் , மூன்று கால்களுடன் பிருங்கி முனிவர் எழுந்தருளியுள்ளார். ஐயனை மட்டுமே வலம் வருவேன் அம்மையையும் சேர்த்து வலம் வர மாட்டேன் என்று அறியாமையால் தவறு செய்த பிருங்கி முனிவர் அன்னையின் சாபத்தினால் இவ்வாறு ஆனார். பின் அம்மை கேதார கௌரி விரதம் மேற்கொள்ளவும் இடப்பாகம் பெறவும் காரணமாய் இருந்தவர் பிருங்கி முனிவர். இன்றும் ஆருத்ரா தரிசனம் திருவுலா முடிந்து ஐயனும் அம்மையும் திரும்பி வரும் போது இந்நிகழ்ச்சியை குறிக்கும் வகையில் ஊடல் உற்சவம் நடைபெறுகின்றது.

பிரம்மோற்சவத்தின் போது அம்மனின் எழிற்கோலம்

உற்சவ மூர்த்திகள் இருவர் பெரிய நாயகி மஹா லக்ஷ்மியும், மஹா சரஸ்வதியும் தோழியராக நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகின்றாள். சிறிய நாயகி பிரகாரத்தில் 16 கால் மண்டபத்தில், அருட்காட்சி தருகின்றாள். அகோர வீரபதித்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்து 6 மாதம் பௌர்ணமியண்று வழிபட்டால் இஷ்ட சித்தியாகும். விராட புருஷன் விஸ்வ கர்மாவுக்கு தனி சன்னதி உள்ளது. அவரை,

ஓம் சத்யோஜாத முkalikambal1காய பிரம்மதேவனே நம:
ஓம் வாமதேவ முகாய விஷ்ணு தேவனே நம:
ஓம் அகோர முகாய ஈஸ்வர தேவனே நம:
ஓம் ஈசான்ய முகாய இந்திர தேவனே நம:
ஓம் தத்புருஷ முகாய சூரிய தேவனே நம:
ஓம் தேவ தேவ மஹா தேவ விஸ்வப்பிரம ஜகத் குருவே நம:
என்று அகில ஜகத்திற்கும் குருவாகவே விஸ்வ கர்மா பெருமக்கள் வணங்குகின்றனர்.

நாளெல்லாம் திருனாளே நமை காக்க வருவாளே என்றபடி திருக்கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாதான். சித்திரையிலே குங்கும லட்ச்சார்சனை. சித்ரா பௌர்ணமியன்று திரு விளக்கு வழிபாடு. வைகாசியிலே வைகாசி விசாகத்தை ஒட்டி 10 நாள் பிரம்மோற்சவம். முதல் நாள் வினாயகர் உற்சவம், துவஜாரோகணம், தினமும் காலையிலும் மாலையிலும் திரு வீதி உலா, காலை 3வது நாள் பூத வாகனம், 7ம் நாள் பூத்தேர் மிகவும் விசேஷம். மாலையிலே 2ம் நாள் காமதேனு வாகனம், 4ம் நாள் ரிஷப வாகனம், 5ம் நாள் சிம்ம வாகனம், 6ம் நாள் தும்பிக்கையும், காதும் ஆடும் யானை வாகனம், 9 நாள் கிண்ணித்தேர் என்று சர்வ அலங்காரத்துடன் அருட்காட்சி தந்து மாட வீதிகளில் உலா வருகின்றாள் அன்னை.

ஆனியிலே வசந்த விழா. அன்னைக்கு உகந்த ஆடி பெருவிழா 10 ஞாயிற்றுக் கிழமைகள், வெள்ளிக்கிழமையிலே ஊஞ்சல் உற்சவம். ஆவணியிலே வினாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி 9 நாட்களும் பல்வேறு அலங்காரங்களில் கொலுவிருக்கும் அன்னை விஜய தசமியன்று வீதி உலா வருகின்றாள். ஐப்பசியில் ஸ்கந்த சஷ்டி விழா. கார்த்திகை சோம வாரம் மற்றும் கார்த்திகை தீபம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம் 10 நாட்களும் மாணிக்கவாசகர் உலா பத்தாம் நாள் காலையில் நடராஜர் சிவகாமசுந்தரி அபிஷேகம் மற்றும் தீபாரதனை பின் புறப்பாடு, கோவிலுக்கு திரும்பி வரும் போது அம்மை முதலில் உள்ளே வந்து பின் கதவை சாத்துகின்றனர் பின் திருஊடல் உற்சவம், அம்மை சமாதானம் ஆன பின் சபைக்கு எழுந்தருளுகின்றார் எம்பெருமான் . மாலையிலே காளிகாம்பாள் திருவீதி உலா. தை மாதம் பொங்கல், பூச்சொரிதல், மூன்றாம் வெள்ளி பட்டாபிஷேகம், 4வது வெள்ளி 108 திருவிளக்கு வழிபாடு, வெள்ளி ஊஞ்சல். தைப்பூசத்தன்று தெப்பம் கச்சாலீஸ்வரர் கோவிலில். மாசி மகத்தில் கடலாடல் மற்றும் சிவராத்திரி. பங்குனியில் வசந்த நவராத்திரி. அம்மை உலா வர நூதன வெள்ளி ரதம் பக்தர்களால் சமர்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அம்மனுக்கு இத்தலத்தில் பூந்தேர், கிண்ணித்தேர், வெள்ளித்தேர் என்று மூன்று தேர்கள்.

பிரம்மோற்சவத்தின் போது 7ம் நாள் பூத்தேர் கமடேஸ்வரிக்கு அம்மையின் அபிஷேக மஞ்சள் பெற்றால் தீராத வினை தீரும், பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு அக்குறை விலகும். அன்னையின் குங்குமம் பெற்றாலே முக்தி. அன்னைக்கு உகந்த வெள்ளிக் கிழமைகளிலே ஆயிரம் ஆயிரமாம் பக்தர் கூட்டம் அலை கடல் என பொங்கி வந்து அன்னையை பணிகின்றனர் அதுவும் ஆடி மற்றும் தை வெள்ளிகளில் அன்னையை தரிசிக்கும் அன்பர் பல கோடி.தாங்களும் எல்லா நலமும் வளமும் பெற சென்னையில் குடி கொண்டிருக்கும் காளிகாம்பாளை வந்து தரிசனம் செய்து தான் பாருங்களேன் கேட்ட வரம் தருவாள் கோட்டையம்மன்.