Sunday, 6 August 2017

சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் தகவல்கள்!

1. இந்த தலத்துக்கு பல பெயர்கள் உண்டு. சங்கரன் கோவிலை பூகைலாயம், புன்னைவனம், சீராசபுரம், சீராசை, வாராசைபுரம், கூழைநகர் என்றும் அழைப்பார்கள்.
2. சங்கரன்கோவில் ஐம்பூத தலங்களில் ஒன்றாகும் இந்த ஐம்பூத தலங்களில் முதல் தலம் இதுவே ஆகும். இந்த கோவிலை மண் தலம் என்று அழைக்கிறார்கள்.சிவராத்திரியன்று பல அடியார்கள் ஒன்று கூடி ஐந்து பூத தலங்களுக்கும் நடந்தே செல்வார்கள். அவர்கள் நடந்து செல்லும் மற்ற தலங்கள் அருகிலேயே உள்ளது. இதில் தருகாபுரம் நீர்தலமாகவும், தென்மலை காற்றுத்தலமாகவும், கரிவலம் வந்த நல்லூர் நெருப்புதலமாகவும், தேவதானம் ஆகாயத்தலமாகவும்அழைக்கப்படுகிறது.
3. சங்கரன் கோவில் முகப்பில் நூற்றி இருபத்தைந்து அடி உயரமுள்ள ஒரு பெரிய கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் ஒன்பது நிலை கொண்ட கோபுரமாகும். கோபுரத்தின் உச்சி தென்வடக்காக 56 அடி நீளம், கீழமேல் அகலம் 15 அடி கொண்டது. உச்சியில் உள்ள குடம் 7 அடி நான்கு அங்குலம் உயரமாகும்.
4. சங்கரன் கோவிலில் சங்கரலிங்கர், கோமதியம்மை, சங்கரநாராயணர் ஆகிய மூன்று சன்னதிகள் உள்ளது. கோவில் வாயிலில் சங்கரலிங்க பெருமான் சன்னதி உள்ளது. வடபகுதியில் கோமதியம்மையும்,தென் பகுதியில் சங்கர நாராயணரும் உள்ளனர்.
5. சிவ பெருமானுக்கு சங்கரமூர்த்தி, வாராசைநாதன், வைத்தியநாதன், சீராசைநாதன், புன்னைவனநாதன், கூழையாண்டி ஆகிய பெயர்கள் உண்டு.
6. இந்தக்கோவிலில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளது. அவை அக்கினி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், வைரவ தீர்த்தம், கவுரி தீர்த்தம் என்பது ஆகும். இந்த கோவிலின் தல மரம் புன்னை மரமாகும்.
7. சங்கரனார் தேர் மிகப் பெரியது. அம்மன் தேர் சற்றுச் சிறியது. இந்த தேர்களில் சித்திரை திருவிழாவின் 9-வது நாளில் சங்கரரும் - தாயாரும் வீதி உலா வருவார்கள். பெரும்பாலும் அதே நாளே மாலைக்குள் இந்த தேர் நிலைக்கு வந்து விடும். ஆடி விழாவில் 9 நாளில் அம்மன் தேர் இழுக்கப்படும்.
8. ஆடி தபசு திருவிழா இங்கு மிகச்சிறப்பாக நடக்கும். அப்போது காட்சி கொடுத்தல் என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அப்போது மக்கள் தங்கள் நிலங்களில் விளைந்த விளைபொருள்களை எல்லாம் தபசு காட்சி நடக்கும் இடத்தில், காட்சி தரும் சிவன், சக்தி மீது போடுவார்கள்.
9. விளைபொருள்களை அம்மை அய்யன் மீதும் மீதும் போட்டால் அந்த ஆண்டு விளைச்சல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
10. இந்த கோவில் காமிகாமம் என்னும் ஆகமம் விதிப்படி கட்டப்பட்டுள்ளது.
11. சங்கரன் கோவிலமைப்பு கி.பி. 1022 தொன்மையானது. இங்கு சித்திரைப் பிரமோற்சவம் 41 நாள் நடக்கும். கடைசி 11 நாள்கள் இந்த திருவிழா மிகச்சிறப்பாக நடக்கும்.
12. இந்த கோவிலில் ஸ்ரீசங்கரநாராயணர் மிக விசேஷமானவர். எங்குமில்லாத அமைப்புடன் மிகச்சிறப்பாக இந்த ஊரில் உள்ளார்.
13. சூரியன் உதிக்கும் காலத்தில் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மேலே பொலிவுடன் படுவதை நாம் தற்போதும் பார்க்கலாம். இந்த கோவிலை பொறுத்தவரை அதை காண ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்