Monday, 9 May 2016

ஏற்காடு

சேலம் பக்கத்தில்...!!
சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காடு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலை வாழிடம் ஆகும். 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இதன் அசரவைக்கும் கண்ணுக்கினிய அழகு மற்றும் இதமான வானிலை பல சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. ஊட்டி போன்ற மற்ற பிரபல மலை வாழிடங்களை ஒப்பிடும்போது இங்கு பல விடயங்கள் மிக மலிவாக இருப்பதால் ஏற்காடு 'ஏழையின் உதகமண்டலம்' எனவும் குறிப்பிடப்படுக
ிறது.
நூறு ரூபாய் பணமும் 'நடை' போட ஆசையும் இருந்தால் இதோ உங்கள் இதயத்தோடு இதயமாக இணைந்துவிடும்- ஏற்காடு.
ஆம் பாக்கட்டுக்குள் இருக்கும் பணத்தை பதம் பார்க்காத பசுமை நிறைந்த மலை-ஏற்காடு.
முதலில் இப்பதிவில் உள்ள படங்களைப்பாருங்கள்.
சரி... இனி ஏற்காடுக்குள்ள நுழையலாமா!!!
பார்வையை விரிய வைக்கும் வனப்பு அதன் உயரம். அழகிய பெண்ணின் உருவம் அதன் அழகு. அவள் கூந்தலை போல பறந்து விரிந்து அலங்கரிக்கும் பசுமை, அதன் கொண்டையை சிங்காரிக்கும் 20 கொண்டை ஊசி வளைவுகள்... வள்ளுவர் வர்ணித்த மெல்லிய இடையால் போன்ற வளைவுகள் இதை ரசித்தபடியே அடிவாரத்தில் இருந்து 22 கி.மீ பயணித்தால் உயரத்தில் இருக்கும் அழகிய ஏற்காடு நகரத்தை அடையலாம். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 29 கி.மீ மட்டுமே. வெகு அருகில் மாநகரத்தை ஒட்டியே இருப்பது இதன் சிறப்பம்சம் ... பசுமை போர்த்திய வனப்பு மிகுந்த மலையின் மேல் மோகம் கொண்டு பனி மேகம் உரசி மெது மெதுவாய் வேகத்தை கூட்டி ஆடும் விளையாட்டை பார்க்கும் நமக்கே வெட்கம் வந்துவிடும்.. இந்த அழகிய இயற்கை எழிலை தான் ஆங்கிலத்தில் 'மிஸ்ட்' என வர்ணிக்கின்றனர்.
நம்ம ஏற்காட்டு மங்கைக்கு இருக்குற ஒரே பிரச்சனை என்னன்னா ஆனாவுனா மேகத்திற்கு கண்ணசைவை காட்டிவிடுவாள். அப்புறமென்ன அடிக்கடி மேகமூட்டமும்,மழையும்தான். சேலம் வெப்பம் நிறைந்த மாவட்டம் என்பதால் யாரும் வெப்பம் தணிக்க இங்க வந்துடலாம். சேலத்தில் இருந்து 20 நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்து உள்ளது. மேலே ஏற்காட்டில் 45 ரூபாய்க்கு நல்ல உணவு கிடைக்கிறது அப்புறமென்ன சுகர், உப்பு, கொழுப்பு ஏதும் அண்டகூடாது என நினைத்து நடை போட்டால் எல்லா சுற்றுலா பகுதிகளும் எட்டிவிடும் தூரம் தான்.நூறு ரூபாயில் செலவு முடிந்துவிடும். இதுவும் ஒரு காரணம், இவள் ஏழைகளின் அரசி என வர்ணிக்க.
அதுக்காக வசதி படைத்தோர் பணத்தை இறைக்க வாய்ப்பில்லையா? என கருத வேணாம். அதற்க்கும் இங்கு வழி உண்டு அறுநூறு ரூபாய் தொடங்கி ஆறாயிரம் வரை ஒருநாள் வாடகை தருமளவு தங்கும் விடுதிகள் உண்டு. பெரிய நட்சத்திர ஹோட்டல்களும் உண்டு.
800 ரூபாய் கொடுத்தால் ஏற்காட்டில் உள்ள அத்தனை இடங்களையும் தங்கள் காரிலேயே சுற்றிக்காட்டுவர். வெளியூர்ல இருந்து வர்றவங்களுக்கு சேலத்தில் உறவுகள் இருந்தால் அவர்கள் பைக்கை வாங்கிகொண்டு கூட ஏற்காடு பவனி வரலாம். ரெண்டு லிட்டர் பெட்ரோலில் ஒட்டுமொத்த அழகையும் கண்களில் உள்வாங்கி இதயத்தில் சேவ் பண்ணி வச்சுக்கலாம்.

No comments:

Post a Comment